Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

ஊழலில் தொடர்புடையவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்: மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ஜுலை 11, 2019 10:19

மதுரை: மதுரை மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் முருகன், தன்னை பணியிட மாற்றம் செய்யப்பட்டதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணி பிறப்பித்த பரபரப்பு உத்தரவு வருமாறு:-

லஞ்சம், ஊழலில் தொடர்புடையவர்களை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு பரபரப்பு உத்தரவிட்டுள்ளது. நாட்டில் லஞ்சம், ஊழல் அதிகரித்துவிட்டது. இதை தடுக்க வேண்டும். லஞ்சத்தை முழுமையாக ஒழிக்க முடியாது. ஆனால் குறைக்க முடியும். அதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். அரசுத்துறை அலுவலகங்கள் கணினி மயமாக்கப்பட்டபோதும் லஞ்சம் குறையவில்லை.

அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து தண்டனை பெற்றுக்கொடுக்க வேண்டும். ஆனால் லஞ்சம் புழங்கும் இடங்களை கண்டறியவும், லஞ்சம் வாங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகள் தயாராக இல்லை. மதுரை மாநகராட்சியில் லஞ்சம் வாங்குவது அதிக அளவில் உள்ளது. மாநகராட்சி ஊழல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு மதுரை மாநகராட்சியின் லஞ்ச ஒழிப்பு பிரிவை பலப்படுத்த வேண்டும்.

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட அலுவலகங்கள், மாநகராட்சி கட்டிடங்களில் லஞ்ச ஒழிப்பு மையங்களை 4 வாரத்தில் திறக்க வேண்டும். அதுமட்டுமல்லாமல் மாநகராட்சி அலுவலகங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணிக்க வேண்டும். பொதுமக்கள் மாநகராட்சி ஊழல் தொடர்பாக இந்த மையங்களில் புகார் அளிக்கலாம். லஞ்ச ஒழிப்பு மையங்கள் மாநகராட்சி கமிஷனரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்க வேண்டும். மாநகராட்சி அலுவலகங்கள், கட்டிடங்களில் லஞ்சம் வாங்குவது, கொடுப்பது சட்டவிரோதம் என பலகைகள் வைக்க வேண்டும். லஞ்ச ஒழிப்புப்பிரிவில் சோதனைக்காக ரகசிய குழுவை அமைக்க வேண்டும்.

திட்டப்பணிகளில் முறைகேடுகளை ஆய்வு செய்ய லஞ்ச ஒழிப்பு பிரிவில் சிறப்பு குழு அமைக்க வேண்டும். இந்தக்குழு திட்டப்பணிகளை ஆய்வு செய்து முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டால் சம்பந்தப்பட்ட இளநிலை பொறியாளர், உதவி பொறியாளர், செயற்பொறியாளர், மண்டல அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடைமுறையை 12 வாரத்தில் முடிக்க வேண்டும். மாநகராட்சி இடம் ஆக்கிரமிப்புகளை மாநகராட்சி கமிஷனர் அடையாளம் காணவும், அவற்றை மீட்கவும், அந்த இடங்களில் இருப்பவர்களை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்க 4 வாரத்தில் ஆய்வு கூட்டம் நடத்தி உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.

தலைப்புச்செய்திகள்